திங்கள், 7 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (15:08 IST)

கராச்சி விமான நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பு… இந்திய அணி பாகிஸ்தான் செல்வதில் மேலும் ஒரு சிக்கல்!

8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்ளுமா இல்லையா என்பது குறித்து இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹைபிரிட் மாடலில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒத்துக்கொள்ளவில்லை.

இப்படி ஒரு குழப்பமான சூழல் நிலவும் நிலையில் இப்போது பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தின் அருகே ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் இரண்டு சீன நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  10 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தற்கொலை தாக்குதல் என்று கருதப்படுகிறது. குண்டுவெடிப்பை நிகழ்த்திய நபர் யாரென்பது இன்னும் கண்டுபிடுக்க முடியவில்லை. இந்த தாக்குதலை நடத்தியது பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி என்ற அமைப்பு என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு விளையாட செல்வது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விளையாட சென்ற இலங்கை வீரர்கள் சென்ற பேருந்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதன் பிறகுதான் பாகிஸ்தானுக்கு எந்த நாட்டு அணியும் விளையாட செல்லாமல் இருந்தது. இப்போதுதான் நிலைமை சீராகி இந்தியா தவிர மற்ற அணிகள் விளையாட செல்ல ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.