1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜனவரி 2024 (08:54 IST)

நாங்க சின்ன நாடுதான்.. ஆனா அதுக்காக..! – சீனா போய் வந்த மாலத்தீவு அதிபருக்கு வந்த திடீர் தைரியம்!

Maldives President
இந்தியாவுடன் மாலத்தீவு அரசு மோதல் போக்கில் இருந்து வரும் நிலையில் சீனா சென்று வந்த பின் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 2ம் தேதி வாக்கில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து லட்சத்தீவுகளுக்கு பயணம் செய்தார். அங்கு அவர் கடற்கரையில் ஓய்வு எடுப்பது, ஸ்கூபா டைவிங் செய்வது உள்ளிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் ”சாகசத்தை விரும்புபவர்களுக்கு லட்சத்தீவுகள் சரியான இடம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அண்டை தீவு நாடான மாலத்தீவில் உள்ள சில அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்தியர்கள் பலரும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணித்துள்ளதுடன் லட்சத்தீவுகளுக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இந்த விவகாரத்தில் பெரும்பாலான சுற்றுலா பயணிகளை இழந்துவிட்ட அதிர்ச்சி மாலத்தீவிடம் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவுக்கு பயணம் செய்து வந்தார். அதற்கு பின்னர் பேசிய அவர் “நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம். அதற்காக எங்களை கொடுமைப்படுத்தும் உரிமையை வழங்கிவிட்டதாக அர்த்தம் இல்லை” என பேசியுள்ளார்.

சீனா கொடுக்கும் தைரியத்தில்தான் மாலத்தீவு அதிபர் இவ்வாறு பேசுகிறார் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. வரும் காலங்களில் இலங்கையை போல மாலத்தீவிலும் சீனா தனது முதலீட்டை அதிகரிக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K