1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (10:11 IST)

2 ஆயிரம் உயிர்களை காவு வாங்கிய புயல்! சோகத்தில் மூழ்கிய லிபியா!

Libya
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் வீசிய கடும் புயலால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.



ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கு பகுதியில் மத்திய தரைக்கடல் அருகே அமைந்துள்ள நாடு லிபியா. கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போரால் சிதைவுற்று இருக்கும் லிபியாவின் கிழக்கு பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கையிலும், மேற்கு பகுதிகள் வெளிநாடுகளின் ஆதரவு பெற்ற அரசின் கையிலும் உள்ளன.

உள்நாட்டு போரால் ஏற்கனவே பல பேர் இறந்து போயுள்ள நிலையில் லிபியாவை இயற்கையும் சோதித்து இருக்கிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவான வலுவான டேனியல் புயல் லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்கியுள்ளது. புயலுடன் கனமழையும், வெள்ளப்பெருக்கும் சேர்ந்து கொண்டு லிபியாவை புரட்டிப் போட்டுள்ளது.

லிபியாவின் டெர்னா, பெடா, சுசா ஆகிய பகுதிகள் புயலால் கடுமையாக சேதமுற்று இருக்கின்றன. கடும் மழைப்பொழிவு காரணமாக அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த புயல், வெள்ள பெருக்கில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இது லிபியாவின் மக்கள் வாழ்க்கையை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Edit by Prasanth.K