1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (14:47 IST)

இறந்த தேனீக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறதா எறும்புகள்? – இணையத்தில் வைரலான வீடியோ

இறந்து கிடக்கும் தேனீ ஒன்றினை சுற்றி எறும்புகள் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முகப்புத்தகத்தில் இந்த வீடியோவை வெளியிட்ட ஒருவர் “நான் எனது தோட்டத்தில் ஒரு தேனீ இறந்து கிடப்பதை பார்த்தேன். அருகில் சென்று பார்த்தபோது அந்த தேனீயை சுற்றி சில எறும்புகள் மலர் இதழ்களை வைத்திருந்தன. இது பார்ப்பதற்கு இறுதி அஞ்சலி செலுத்துவது போல இருந்தது” என பதிவிட்டுள்ளார்.

இறுதி அஞ்சலி செலுத்துவது என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட பழக்கம். வேறு உயிரினங்களும் இப்படி செய்யுமா என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இதுகுறித்து மெல்போர்ன் பல்கலைகழக பேராசிரியர் மார்க் எல்கர் கூறும்போது “மனிதர்கள் போல எறும்புகள் இறுதி அஞ்சலி செலுத்தாது. மேலும் இறந்து போனவற்றை தின்று அரித்து இயற்கை சமநிலையை பேண உதவுபவை எறும்புகள்தான். ஒருவேளை எறும்புகளே அந்த தேனீயை புற்றுக்கு இழுத்து சென்றிருக்கலாம்.” என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு பூச்சி ஆராய்ச்சியாளரான டேவிட் நோட்டான் “நான் பார்த்தவரை அந்த எறும்புகள் ஹேர்வெஸ்டர் எனப்படும் சைவ பொருட்களை சாப்பிடும் வகை எறும்புகள் என்றே தெரிகிறது. அவை பூ இதழ்களை தங்களது புற்றிற்கு கொண்டு சென்று கொண்டிருந்திருக்கலாம். இறந்த தேனி புற்றின் பாதையை அடைத்தவாறு அதன் மேல் கிடந்திருக்கலாம். அதனால் எடுத்து வந்த இதழ்களை தேனீயை சுற்றி போட்டுவிட்டு தேனீயை அகற்றும் முயற்சியில் எறும்புகள் இறங்கியிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

எது எப்படியிருந்தாலும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்பவர்கள் தேனீக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாகவே இதை கருதுகிறார்கள். இந்நிலையில் இந்த விளக்கத்தையும் பலர் அந்த கமெண்டுகளில் பதிவிட்டுள்ளனர்.