செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:56 IST)

இலங்கையில் உச்சம் தொட்ட விலைவாசி… அதிபரின் தீர்மானத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்!

இலங்கையில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விலைவாசி உச்சத்தைத் தொட்டுள்ளது.

இலங்கையில் நாடு முழுவதும் பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டு இருப்பதாக அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்நியச் செலவாணி பற்றாக்குறையால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.இதனை அடுத்து இலங்கையில் பொருளாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஏற்படுத்தியுள்ளார் இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உணவுப் பஞ்சத்துக்குக் காரணம் விவசாயம் முழுவதையும் உடனடியாக இயற்கை விவசாயமாக மாற்ற அதிபர் இட்ட உத்தரவுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் அத்யாவசிய சேவைகளின் ஆணையராக இலங்கை அரசு நியமித்தது. விலைகளைக் கட்டுப்படுத்தும் உரிமை அவரிடம் வழங்கப்பட்டது. இது மறைமுகமாக ராணுவ ஆட்சிக்கே வழிவகுக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஆனால் அதிபரின் இந்த முடிவுக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இது சம்மந்தமான வாக்கெடுப்பில் ஆதரவாக 132 பேரும், எதிராக 51 பேரும் வாக்களித்தனர்.