1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Nawaz Sharif opens up controversial statement on Mumbai attack

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: மாஜி பிரதமரால் சர்ச்சை!

மும்பை தாக்குதல்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவியை இழந்தவருமான நவாஸ் ஷெரீப் இந்தியாவில் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது.
 
ஆனால், ஆதரங்களை சமர்பித்தும் பாகிஸ்தான் இதை ஒப்புக்கொள்ள மறுத்தது. இந்த வழக்கு ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் இது குறித்து பேட்டி அளித்துள்ளார். 
அவர் கூறியுள்ளதாவது, பாகிஸ்தானில் இன்னும் தீவிரவாத அமைப்பு உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாதிகளை எல்லை தாண்டி அனுப்பி மும்பையில் அப்பாவி மக்கள் 160 பேரை சுட்டுக்கொல்ல எப்படி அனுமதிக்கலாம். இதை விளக்கமுடியுமா. இதுதான் பாகிஸ்தான் கொள்கையா? இதுபோன்ற செயலை ஒருபோதும் பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
 
இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இது குறித்து முடிவு எடுக்க அவசர ஆலோசனை ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், நவாஸ் தரப்போ தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.