வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 ஜூலை 2018 (19:32 IST)

பனிப்பாறையால் கிராமத்தைவிட்டு வெளியேறிய மக்கள்!

பெரிய பனிப்பாறை கிரீன்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு மிகவும் நெருங்கி வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
இந்தப் பனிப்பாறை உடைந்து விட்டால் எழுகின்ற அலைகளால் வீடுகளில் வெள்ளம் புகுந்துவிடலாம் என்று மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னார்சூட் கிராமத்தில் கடலை தொட்டு அமைந்திருக்கும் மேடான நிலப்பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இந்தப் பனிப்பாறை விளங்குகிறது.
 
ஆனால், தரையை தட்டி நிற்கும் இந்தப் பனிப்பாறை இரவில் நகரவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுபோன்ற பெரிய பனிப்பாறையை இதற்கு முன்னால் பார்த்ததில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
கடந்த கோடை காலத்தில் கிரீன்லாந்தின் வட மேற்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் ஏற்பட்ட அலைகளால் வீடுகளில் வெள்ளம் புகுந்து 4 பேர் பலியாகினர். இந்தப் பனிப்பாறைக்கு அருகிலுள்ள இடத்தில் வாழுகின்ற 169 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக டென்மார்க் செய்தி நிறுவனமான ரிட்ஸாவ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இந்தப் பனிப்பாறையில் வெடிப்புகளும், துளைகளும் ஏற்பட்டுள்ளதால், எந்நேரத்திலும் உடையலாம் என அஞ்சுகின்றோம் என்று கிராம கவுன்சில் உறுப்பினர் சுசான்னே எலியாஸ்சன் உள்ளூர் செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.
 
இந்த கிராமத்தின் மின்சார நிலையமும், எரிபொருள் கிடங்குகளும் கடற்கரைக்கு அருகில் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, இவ்வாறான மிக பெரிய பனிப்பாறைகளால் ஏற்படும் ஆபத்துக்கள் அடிக்கடி நிகழலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.