1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:32 IST)

தைவான் வான் பரப்பில் பறந்த சீன ராணுவ போர் விமானங்கள்

சீன ராணுவ ஜெட் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததாக தைவான் தெரிவித்துள்ளது. 
 
போர் விமானங்கள் மற்றும் அணுஆயுத திறன் கொண்ட விமானங்கள் உட்பட மொத்தம் 19 விமானங்கள் தங்களுடைய வான் பாதுகாப்பு மண்டலத்தில் பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
அந்தத் தீவு அருகே சீனாவின் விமானப்படையின் தொடர்ச்சியான பணிகள் குறித்து தைவான் அரசு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புகார் தெரிவித்து வருகிறது. தைவானை தமது ஆளுகையின் ஒரு அங்கமாக சீனா கோரி வந்தாலும், அதை ஏற்காமல் தைவான் அரசு சுயாதீனமாக செயல்பட்டு வருகிறது.
 
மேலும் தைவான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கிறது. சீன விமானப்படையின் ஞாயிற்றுக்கிழமை பணியில் நான்கு எச்-6 ரக போர் விமானங்கள் தமது வான் பரப்பில் பறந்ததாக தைவான் கூறியுள்ளது. அந்த விமானங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் திறன் வாய்ந்தவை என்றும் தைவான் தெரிவித்துள்ளது.