பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்வு.. கிரிப்டோ சந்தையில் குவியும் முதலீடுகள்..!
பிட்காயின் மதிப்பு நேற்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய சாதனையை எட்டியது. கிட்டத்தட்ட $112,000 என்ற குறியீட்டை தொட்டது. தேவை அதிகரிப்பு மற்றும் சந்தையில் உள்ள ஆர்வம் ஆகியவை கிரிப்டோகரன்சி சந்தையில் தொடர்ந்து உத்வேகத்தை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
உலகின் மிகவும் பிரபலமான டிஜிட்டல் நாணயமான பிட்காயின், நேற்று புதிய உச்சமாக $111,988.90ஐ தொட்டது. கடைசியாக 0.4% உயர்ந்து $111,259 இல் வர்த்தகம் செய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, பிட்காயின் 18% க்கும் அதிகமாக லாபம் ஈட்டி, இந்த ஆண்டின் சிறந்த செயல்திறன் கொண்ட முதலீடாக மாறியுள்ளது.
பிட்காயினின் சந்தை மதிப்பு டிரில்லியன்களைத் தாண்டியுள்ளதால், மேலும் பல நிறுவன முதலீட்டாளர்கள் இந்த துறையில் நுழைகின்றனர். ஒரு காலத்தில் பிட்காயின் குறித்த வதந்தைகளால் விலகி இருந்த பெரிய நிறுவனங்கள் இப்போது ஆர்வமாக வர்த்தகம் செய்ய ஆரம்பித்துள்ளதால் இதன் தேவை அதிகரித்துல்ளது.
பிட்காயின் விலை உயர இன்னொரு முக்கிய காரணம் அமெரிக்க அரசியல் களம் என்று சொல்லலாம். அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் டிஜிட்டல் சொத்துக்கள் மீதான நட்பு நிலைப்பாடு கிரிப்டோ வர்த்தகர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
Edited by Siva