1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (13:57 IST)

சிலரை குறை சொல்ல வேண்டி வரும்: விஜய்சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  லெனின் பாரதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. 
 
இதில் படத்தை தயாரித்த நடிகர் விஜய் சேதுபதி விழாவில் பேசுகையில், இயக்குனர் லெனின் மேற்கு தொடர்ச்சி மலை படத்தை எடுப்பது குறித்து பேச வந்த போது எனக்கு ரூ.25 லட்சம்தான் சம்பளம். எனவே அதிகம் சம்பாதிக்கும்போது இந்த படத்தை தயாரிக்கிறேன் என்றேன். அதன்படி படத்தை தயாரித்தேன். 
 
ஆனால் படத்தை லாபம் பார்க்காமல் விற்றுவிட முனைந்தேன். ஆனால் படத்தை பார்த்து வாங்குவதாக கூறிவர், வாங்க மறுத்துவிட்டார். எனவே இப்படம் பெட்டிக்குள் முடங்கி கிடக்ககூடாது என்று நினைத்து படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தேன்.
 
இப்போது படத்துக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பை பார்க்கும்போது, எனது கணிப்பு தவறு என்று புரிகிறது. நல்ல படங்களை மக்கள் கொண்டாடுவார்கள் என்று உணர்ந்துள்ளேன். கலை என்பது வியாபாரம் சார்ந்தது. ஏழை–எளிய மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இந்த தரமான படத்தை தயாரித்ததை பெருமையாக கருதுகிறேன். 
 
கலை என்பது யாராலும் கணித்து சொல்ல முடியாத பெரிய உலகம். வியாபாரிகள் நம்பினால்தான் படத்தை திரைக்கு கொண்டு வர முடியும். இந்த படத்தை ஆரம்பத்தில் நம்பாத விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் இப்போது நம்புகிறார்கள். பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ள இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்று கேட்கிறார்கள். ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். மனம் நிறைவாக இருக்கிறது. 
 
விருது கிடைக்காதது குறித்து வெளிப்படையாக பேசினால் சிலரை குறை சொல்ல வேண்டி வரும். குறை சொல்ல நான் விரும்பவில்லை. வாய்ப்பு அமைந்தால் தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்கள் தயாரிப்பேன். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.