செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (09:38 IST)

எல்லோரையும் போல் அல்லாமல் கூடுதலாக ஒன்றை செய்தார் சிவகார்த்திகேயன் ! வெற்றிக்கு இதுதான் காரணம்! #HBDSivaKarthikeyan

நிகழ்ச்சி தொகுப்பாளனாக, நடிகனாக, பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராக  அவதாரங்கள் பல எடுத்து , தமிழ் திரை துறையில் தவிர்க்க முடியாத சக்தியாரும் மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். 
இவர் 1985ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரியில் பிறந்தார். இன்று சிவகார்த்திகேயன் தனது 34வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.  அவரை பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்..
நிகழ்ச்சி தொகுப்பாளராக தனியார் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆன சிவகார்த்திகேயன், வெறும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியை மட்டும் செய்யவில்லை. அதையும் தாண்டி எல்லோரையும் சிரிக்க வைத்தார். இதனால் சிவகார்த்திகேயனுக்காகவே நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம். பல லட்சம் பெண்கள் மற்றும் குழந்தைகளை 10 வருடங்களுக்கு  முன்பே தனது ஆத்மார்த்தமான நகைச்சுவை உணர்வால் கவர்ந்து விட்டார். 
 
அதன் பிறகுதான் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகம் ஆனார். மெரினாவில் கதாநாயகன் என்பது கதை தான் என்றாலும், தன் எதார்த்தமான நடிப்பால் எல்லோரையும் கவனிக்க வைத்தார். அடுத்ததாக  3 படத்தில் நடித்து தனுஷின் நட்பை பெற்றார். இதற்கிடையில் முழு ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை  சூப்பர் ஹிட்டானது. என்ன ஒரு நடிப்பு, எப்படி ஒரு நகைச்சுவை அமைப்பு என அந்த படத்தை போற்றாதவர்களே  இல்லை. 
 
கேடி பில்லா கில்லாடி ரங்காவில் சிவகார்த்திகேயனின் காமெடியை பார்த்து சிரிக்காதவர்களே இல்லை. இதன் பின் தனுஷின் நட்பால் எதிர் நீச்சல் படத்தில் முழு கமர்ஷியல் ஹீரோவாக களம் கண்டார் சிவகார்த்திகேயன். இந்த படம் ஹிட்டுக்கு கதை, பாட்டு, முக்கிய காரணம் என்றாலும், சிவகார்த்திகேயனின் ரசிக்க வைத்த நடிப்பும் மிக முக்கியமானது தான் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். 
 
அதன் பிறகு மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என பல வெற்றி படங்களை கொடுத்து விட்டார் சிவகார்த்திகேயன். நடிப்பு மற்றும் காமெடியை தாண்டி வேலைக்காரன் படத்தின் மூலம் சமூக பொறுப்பையும் சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தினார். பல லட்சம் குழந்தைகள் தன்னை பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்துள்ள சிவகார்த்திகேயன் இப்போது கூடுதல் கவனம் செலுத்தி சமூக பொறுப்பு உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.   கனா படத்தை தயாரித்ததன் மூலம் சமூக பொறுப்புகளை சுமந்து செல்லும் நல்ல கலைஞனாக உயர்ந்து நிற்கிறார்.
 
நடிகர்கள்  விஜய், அஜித்துக்கு  பிறகு அடுத்த தலைமுறை என அறிவித்தால் அதில் நிச்சயம் விஜய்யின் இடத்தில் சிவகார்த்திகேயன் இருப்பார். ஏனெனில் விஜய்யை போலவே குழந்தைகள், பெண்களை அதிகம் கவர்ந்து விட்டார் சிவகார்த்திகேயன்... அப்படி என்றால் அஜித் இடம் யாருக்கு என்ற கேள்வி வரும்... அது நிச்சயமாக விஜய் சேதுபதி என சொல்லி விட முடியும். 
 
சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு சிம்பிளாக ஒரே காரணத்தை சொல்வதென்றால், எல்லோரையும் போல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை  மட்டும் செய்யவில்லை. அதையும் தாண்டி ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் எல்லோரையும் சிரிக்க வைத்தார், இப்போது சிரிப்புடன் சிந்திக்க வைத்து கொண்டிருக்கிறார்.  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்...