வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (20:16 IST)

ஓட்டு போடாத நயன்தாரா – கடுப்பான கருணாஸ்

நேற்று நடந்த நடிகர் சங்க தேர்தலில் பல நடிக, நடிகையர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளபோதும் நயன்தாரா போன்ற நடிகைகள் ஓட்டு போட வராதது ஏன்? என நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர். பல்வேறு சிரமங்களுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில் பல்வேறு நடிக, நடிகையரும் வாக்களித்தனர்.

ஆனால் இதில் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் வாக்களிக்க வரவில்லை. நயன்தாராவை பொதுவெளியில் ராதாரவி கேவலமாக பேசியதாக நடிகர் சங்கத்தில் நயன்தாரா புகார் அளித்தபோது உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். ராதாரவிக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பினார்கள். விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருந்ததால் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்தும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை தாண்டி ராதாரவி அடிப்படை உறுப்பினராக இருந்த திமுகவே அவரை இதுபோன்ற அநாகரீக பேச்சில் ஈடுபட்டதற்காக கண்டித்தது.

நயன்தாரா அளித்த புகாரை கருத்தில் கொண்டு ஒரு சீனியர் நடிகரையே இந்த அளவுக்கு கண்டித்த நடிகர் சங்கத்தினை மதித்து அவர் தேர்தலில் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து நடிகர் சங்க பாண்டவர் அணியில் உள்ள நடிகர் கருணாஸ் “நாம் வேண்டுகோள் தரமுடியுமே தவிர, அழுத்தம் தர முடியாது. அவர்களாகதான் பொறுப்பை உணர்ந்து வாக்களிக்க வர வேண்டும். சிலர் தங்களால் வர முடியாவிட்டாலும் தபால் வாக்காவது செலுத்தியிருக்கிறார்கள். நயன்தாராவுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது சங்கம் உதவியிருக்கிறது. அப்படியிருக்கும்போது சங்க உறுப்பினராக நயன்தாரா ஓட்டு செலுத்தி தனது கடமையை ஆற்றியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.