வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (14:43 IST)

பொய்யான தகவல் அளித்த வரதராஜன் மீது நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்

பொய்யான தகவல் அளித்த வரதராஜன் மீது நடவடிக்கை
தூர்தர்ஷன் உள்பட ஒரு சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தவரும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தவருமான வரதராஜன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தனது நண்பர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் இதனை அடுத்து அவரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்க முயற்சித்ததாகவும் ஆனால் எந்த மருத்துவமனைகளிலும் பெட் இல்லை என்று கூறி அனுமதிக்க மறுத்து விட்டதாகவும் இதனை அடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் தெரிவித்துள்ளார்
 
இதனால் சென்னை உள்பட எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் 
 
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5000 படுக்கைகள் உள்ளதாகவும் பேரிடர் காலத்தில் டிவி நடிகர் வரதராஜன் தவறான கருத்தை வெளியிட்டுள்ளார் என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அதிக படுக்கை வசதிகள் இருப்பதாகவும் படுக்கைகள் காலியாகிவிட்டதாக வரதராஜன் வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்டு உள்ளார் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வரதராஜனின் குற்றச்சாட்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது