1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (12:17 IST)

யோ யோ டெஸ்ட்டில் பாஸாகியும் என்னை நீக்கினார்கள் – யுவ்ராஜ் சிங் வேதனை !

36 வயதில் நான் யோ யோ டெஸ்ட்டில் பாஸாகியும் என்னை அணியில் இருந்து நீக்கியது எந்த நியாயமுமற்றது என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய யுவ்ராஜ் சிங் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு அடுத்து நடந்த இரு உலகக்கோப்பைகளிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் யுவ்ராஜ் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குப் பின் என்னால் மற்றொரு உலகக்கோப்பை போட்டியில் விளையாடி இருக்க முடியும். அதற்குரிய உடல்தகுதி இருந்தும் நான் நிராகரிக்கப்பட்டேன். நிர்வாகத்தில் இருந்தவர்கள் என்னை ஆதரித்து இருந்திருந்தால் நான் விளையாடி இருக்க முடியும். ஆனால் எனக்கென காட்பாதர் யாரும் இல்லை.

2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 2 போட்டிகளில் நான் ஆட்டநாயகன் விருது பெற்றேன். என்னுடைய 36 வயதில் நான் யோ-யோ தகுதித் தேர்வுக்குத் தயாராகி அதில் தேர்வானேன். 16 ஆண்டுகளாக சர்வதேசக் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீரரை இவ்வாறு நீக்கியது துரதிர்ஷ்டமே. இந்தியாவுக்கு வெளியே சென்று நான் விளையாட வேண்டுமென்றால் நான் ஓய்வு பெற வேண்டும் என்பதால், நான் ஓய்வை அறிவித்தேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் காலம், சிறிது சுமையாகவே இருந்தது’ எனக் கூறியுள்ளார்.