1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (12:19 IST)

அன்றைக்கு பானி பூரி விற்றவர்; இன்று கிரிக்கெட் வீரர்! மிரள வைக்கும் யாஷாஸ்வி!

ஐபிஎல் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் முடிந்துள்ள நிலையில் அனைவராலும் உற்று நோக்கப்படும் கிரிக்கெட் பிரபலமாக மாறியிருக்கிறார் யஷாஸ்வி ஜெய்ஸ்வால். சாதாரண பானிபூரி விற்கும் பையனாக இருந்து கடின உழைப்பால் இன்று கிரிக்கெட் நட்சத்திரமாக சாதனைகள் பல படைக்க காத்திருக்கிறார் யஷாஸ்வி.

சிறு வயதில் உத்தர பிரதேசத்தில் இருந்து பிழைப்புக்காக மும்பை வந்த யஷாஸ்வி குடும்பத்தினருக்கு வசிக்க வீடு கூட கிடையாது. மும்பை ஆசாத் மைதானம் அருகே உள்ள முகாமில் தங்கியிருந்த யஷாஸ்வி பானிபூரி கடையில் வேலை பார்த்திருக்கிறார். தினமும் ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்களை பார்க்கும்போதெல்லாம் தானும் இதுபோல ஒருநாள் கிரிக்கெட் நட்சத்திரமாக ஒளிர வேண்டும் என்ற எண்ணம் யஷாஸ்வி மனதில் வளர்ந்து கொண்டே இருந்திருக்கிறது.

யஷாஸ்வியின் வாழ்க்கையில் அப்போதுதான் ஒரு மாற்றம் வந்தது. கிரிக்கெட் பயிற்சியாளரான ஜ்வாலா சிங் யஷாஸ்வியின் ஆர்வத்தை கண்டு அவருக்கு பயிற்சியளிக்க தொடங்கியுள்ளார். காலை நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி, மாலை நேரத்தில் பானிபூரி கடையில் வேலை என்று வாழ்ந்து வந்த ய்ஷாஸ்வியை சக விளையாட்டு வீரர்கள் நடத்திய விதம் குறித்தும் வருத்தத்தோடு கூறியுள்ளார் யஷாஸ்வி.

தனது அயராத தன்னம்பிக்கையாலும், உழைப்பாலும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் மும்பை அணியில் இடம் பிடித்தார் யஷாஸ்வி. ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷாஸ்வி இந்திய அணியின் இளையோர் உலக கோப்பை அணியிலும் இடம்பிடித்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ராஜஸ்தான் அணி 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு யஷாஸ்வியை ஏலத்தில் எடுத்திருக்கிறது. சாதாரண பானிபூரி விற்கும் சிறுவனாக இருந்து தனது விடாத தன்னம்பிக்கை மூலம் மிகப்பெரும் கிரிக்கெட் வீரனாக வளர்ந்துள்ள யஷாஸ்வி பலருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.