1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 1 நவம்பர் 2021 (10:35 IST)

எங்களுக்கு தைரியம் போதவில்லை... வேதனையில் விராட்!

நாங்கள் போதிய தைரியத்துடன் ஆடவில்லை என தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். 

 
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது என்றே கூறலாம்.
 
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்து வரும் மூன்று போட்டிகளில் மிக அபாரமாக வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை கொடுத்த இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை சொல்ல முடியும். 
இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது, உள்ளபடியே கூறவேண்டுமெனில் நாங்கள் போதிய தைரியத்துடன் ஆடவில்லை. பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி. களத்தில் நுழைந்த போதிலிருந்தே எங்கள் உடல் மொழி சரியில்லை, தைரியமானதாக இல்லை.
 
பேட்டிங்கில் அடித்து ஆட வேண்டும் என்று ஆடிய போதெல்லாம் விக்கெட்டை இழந்தோம். பேட்டிங்கில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் ஷாட் ஆடுவதா வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில் ஷாட்டை ஆடினோம், ஆட்டமிழந்தோம். 
 
டி20 கிரிக்கெட்டை ஆடும் விதம் ஒன்றேயொன்றுதான். நம்பிக்கையுடன் அடித்து ஆட வேண்டும். கணக்கிட்டு ரிஸ்க்குகளை எடுக்க வேண்டும். அடுத்த போட்டியில் பாசிட்டிவ் மனநிலையில் ஆடுவோம், இன்னும் இந்தத் தொடரில் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.