வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (17:59 IST)

உலகக்கோப்பை வில்வித்தை: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை

உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
 
அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் உலகக்கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியா வீராங்கனை தீபிகா குமாரி முன்னேறினார்.
 
இதன்பின்னர் இறுதிப்போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த மிட்செல் க்ரோப்பனை, தீபிகா குமாரி சந்தித்தார். இந்த போட்டியின் முதல் செட்டில் தீபிகா குமாரி 2-0 என முன்னிலைப் பெற்றார். 2-வது செட் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். 3-வது சுற்றில் ஜெர்மனி வீராங்கனை மிட்செல் கைப்பற்றி ஸ்கோரை 3-3 என சமநிலை படுத்தினார்.
 
இதனையடுத்து நடைபெற்ற 4-வது, 5-வது செட்டில் சிறப்பாக விளையாடிய தீபிகா குமாரி 29 புள்ளிகள் மற்றும் 27 புள்ளிகள் பெற்றார். இதனால் ஸ்கோர் 7-3 என உயர்ந்தது. இதன்மூலம் தீபிகா குமாரி உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
 
ஏற்கனவே கடந்த 2011, 2012, 2013 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.