1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (10:34 IST)

ஆஸ்திரேலிய வீரருக்கு வாழ்நாள் தடை விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து ஊதியப் பிரச்சனையால் வெளியேறிய ஜேம்ஸ் பாக்னருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமீயர் லீக் போல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் லீக் தொடர் பி எஸ் எல். இதில் ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஜேம்ஸ் பாக்னர் குவெட்டா கிளாடியேட்டர் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் கடந்த சில போட்டிகளாக அவர் விளையாடவில்லை. மேலும் அணி நிர்வாகம் தனக்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றி விட்டதால் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

இதை மறுத்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜேம்ஸ் பாக்னரிடம் ஏஜெண்ட் மூலமாக லண்டனில் உள்ள அவரின் வங்கிக் கணக்குக்கு 70 சதவீத ஊதியம் அனுப்பப் பட்டுவிட்டது. இன்னும் 30 சதவீத ஊதியம் தொடர் முடிந்த 40 நாட்களுக்கு பிறகுதான் அனுப்பப்படும். ஆனால் பாக்னர் லண்டனில் உள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 70 சதவீதம் தொகையை மீண்டும் ஆஸ்திரேலியாவில் உள்ள வங்கிக் கணக்கில் செலுத்த சொல்கிறார். இது விதிமுறைகளின் படி தவறாகும்.

இதுமட்டும் இல்லாமல் பாக்னர் ஹோட்டலிலும் தவறாக நடந்துகொண்டு ஹோட்டல் சொத்துகளை சேதப்படுத்துகிறார். அவரின் நடத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. அதனால் அவர் வாழ்நாள் முழுவதும் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் விளையாட தடை விதிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்.