வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (11:55 IST)

எக்ஸ்ட்ரா நம்பர் நான் கேட்டேனா? – ஆரம்பமே கங்குலிக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்!

சர்வதேச கிரிக்கெட் வாரிய கூட்டத் தொடரில் ஐசிசி தொடர்களை அதிகப்படுத்துவது தொடர்பான திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஐசிசி கவுன்சில் கூட்டத்தில் 2023 உலக கோப்பைக்கு பிறகு அடுத்த 8 ஆண்டுகளுக்கு நடத்தபோகும் தொடர்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வழக்கம் போல நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர் உலக கோப்பை இரண்டு, 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நான்கு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. இவை அல்லாமல் புதியதாக இரண்டு தொடர்களை உருவாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தது ஐசிசி.

தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் அணிகளுக்கிடையேயான போட்டியாக அது இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் ஐசிசி நடத்தும் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமைகளுக்கான டெண்டர்களை ஐசிசியே மேற்கொள்ளும். அதனால் கிடைக்கும் வருவாயில் சில விகிதம் மட்டுமே பிசிசிஐக்கு வந்து சேரும்.

ஆனால் இந்திய அணி தற்போது நடத்தி வரும் இரு நாடுகளுக்கிடையேயான டெஸ்ட் மேட்சுகளுக்கான உரிமங்கள் நேரடியாக பிசிசிஐ-யிடமிருந்தே பெறப்படுவதால் முழு வருவாயும் பிசிசிஐக்கு கிடைக்கும். தற்போது ஐசிசி தொடர் போட்டிகளை அதிகரித்தால் இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் மேட்சை குறைத்து கொள்ள வேண்டியிருக்கும்.

இதனால் பிசிசிஐ வருமானத்தில் மிகப்பெரும் இழப்பு ஏற்படும். ஆனால் மற்ற நாடுகள் இந்த திட்டத்திற்கு தங்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளன. தற்போது இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டிய சிக்கலான தருணத்தில் புதிய தலைவர் சவுரவ் கங்குலி சிக்கியுள்ளார்.

எக்ஸ்ட்ரா மேட்ச் நான் கேட்டேனா என்று முரண்டு பிடிப்பாரா? அல்லது எத்தனை மேட்சுகள் வந்தாலும் எதிர்கொள்வோம் என ஒரு கை பார்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.