1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (13:29 IST)

இங்கிலாந்து தொடரை சீக்கிரமே முடிக்க பிசிசிஐ அழுத்தம்… ஐபிஎல் நடத்த திட்டமா?

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை ஒரு வாரம்  முன்னதாகவே நடத்தி முடிக்க பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மூலம் வரும் விளம்பர வருமானம் உள்ளிட்டவைகளை இப்போது பிசிசிஐ இழந்துள்ளது.

இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘எஞ்சிய போட்டிகளை இந்தியாவில் நடத்துவது சிரமம். பயோ பபுளுக்குள் இருக்கையில் கொரோனா பரவல் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம்’ எனக் கூறினார்.

இந்நிலையில் அடுத்த மாதம் இங்கிலாந்தில் இந்தியா மற்றும் நியுசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி ஆட்டம் நடக்க உள்ள நிலையில் அங்கு செல்லும் பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்தில் நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின்னர் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இப்போது அந்த தொடரை சீக்கிரமே நடத்தி முடிக்க பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாம். அப்படி நடத்தி முடித்தால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை அங்கு நடத்திவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.