1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மகாளய பட்ச காலமும் கர்ணனின் வருகையும்...!!

குரு சேத்ர யுத்தத்தின் முடிவில், கர்ணனைக் கொல்லும் நேரம் வந்தது. அவன் தர்மங்கள் பல செய்த மாபெரும் வள்ளல் என்றாலும் கூட, அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால், அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ண பரமாத்மா. 

சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த பொன், நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து  தரப்பட்டிருந்தன; ஆனால், அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்தபோது, தேவர்கள் அவனிடம், "கர்ணா… நீ  பூமியில் இருந்தபோது பொன்னும், மணியுமே தானம் செய்தாய்; அன்னதானம் செய்யவில்லை. எனவே, நீ இப்போது பூமிக்குச் செல் என்றனர்.
 
கர்ணன் அவ்வாறு பூமிக்கு வந்த காலமே மகாளய காலம் ஆனது. உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய  வேண்டும். 
 
கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். 
 
தினமும் காலையில் பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுக்க வேண்டும். காலை, மதியம் உணவிற்கு முன், காகங்களுக்கு சோறிட வேண்டும். 14 நாட்களும் தினமும் ஒரு ஏழைக்காவது உணவு கொடுக்க வேண்டும்.
 
ஏதாவது ஒருநாள் ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி கடற்கரையிலோ, கங்கை (காசி), தாமிரபரணி (பாபநாசம்), காவிரி (ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்) ஆகிய  நதிக்கரைகளிலோ, குற்றாலம் அருவிக்கரையிலோ தர்ப்பணம் செய்து, அங்குள்ள கோவில்களில் வழிபட்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்,  முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும்.