வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (11:11 IST)

இன்ஸ்டாகிராமில் காதல் செய்த இளைஞர்! – ப்ளாக் செய்ததால் தற்கொலை!

திருச்சியில் இன்ஸ்டாகிராம் மூலமாக காதல் செய்து வந்த இளைஞர், ப்ளாக் செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். தனியார் வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அந்த சமயம் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஊர் திரும்ப முடியாத ஆனந்தகுமார் திருச்சியிலேயே இருந்துள்ளார்.

அப்போது செல்போனில் இன்ஸ்டாகிராமில் பெண் கணக்கு ஒன்றுடன் நீண்ட நாட்களாக பேசி வந்துள்ளார். அவரது இந்த பேச்சு காதலாக மாறியுள்ளது. முகம் கூட தெரியாத பெண் கணக்கு ஒன்றுடன் காதலில் இருந்த ஆனந்த குமாரை திடீரென அந்த கணக்கை வைத்திருந்தவர் ப்ளாக் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் ஆனந்தகுமார் காணப்பட்டதால் உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

இருப்பினும் விரக்தியடைந்த ஆனந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் ஆனந்தகுமாருடன் இன்ஸ்டாகிராமில் பேசியவர் பெண்ணா அல்லது பெண் போல கணக்கு வைத்திருந்த ஆணா? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.