எந்த நேரத்திலும் வேலை நிறுத்தத்தை தொடங்குவோம்: போக்குவரத்து சங்கம் எச்சரிக்கை..!
பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் எந்த நேரத்திலும் வேலை நிறுத்தம் செய்வோம் என போக்குவரத்து தொழிற்சங்கங்களில் ஒன்றான அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 22 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் பேசியபோது, "போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி போக்குவரத்து துறை செயலாளரை சந்திக்க இருக்கிறோம். இதனை அடுத்து, பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் எந்த நேரத்திலும் நாங்கள் வேலை நிறுத்தம் செய்வோம். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை தவிர்த்து, மற்ற சங்கங்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஆறு ஆண்டுகளாக ஊதிய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அகவிலைப்படி உயர்வும் ஓய்வூதிய பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தான் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். விரைவில் வேலை நிறுத்த தேதியை அறிவிப்போம்," என்று கூறியுள்ளார்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
Edited by Mahendran
