வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (15:23 IST)

வீணாகக் கடலில் கலக்கும் நீர்.! விரிவான அறிக்கை தேவை.! தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு.!!

highcourt
வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாக்கும் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பருவமழை காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாக்கும் வகையில், சென்னையில் உள்ள ஏரிகளைச் சீரமைக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் தாக்கல் செய்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 
 
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பருவமழை காலங்களில் வீணாகும் நீரை அருகில் உள்ள ஏரிகளுக்குத் திருப்பி விட்டு ஏன் பாதுகாக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பருவமழை காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் அது சம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும், மழை நீரை ஏரி குளங்களுக்குத் திருப்பி விடுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனக் கூறிய நீதிபதிகள், நீர்வளத் துறை உருவாக்கப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.