1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (16:40 IST)

நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு..! தேர்தல் விதிமீறல்..! எதிர்க்கட்சிகள் புகார்..!!

நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதிய உயர்வை மத்திய அரசு அறிவித்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் செய்தியாளரிடம் பேசிய தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி, மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய உயர்வை அறிவித்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்றார்.

ஊதிய உயர்வுக்கான அரசாணையை முன்னதாகவே போடப்பட்டிருப்பதால் இந்த அறிவிப்பை அளித்ததாக கூறுகின்றனர் என்றும் அரசாணை வெளியிட்டிருந்தால் அதனை உடனடியாக செயல்படுத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
கடந்த ஒரு மாத காலமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தந்தார். அப்போது இந்த திட்டத்தை அறிவித்திருக்கலாம். ஆனால், அப்போது அறிவிக்காமல் தற்போது தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் அறிவித்திருப்பது மக்களிடம் முறைகேடான முறையில் வாக்கு சேகரிப்பதற்கு சமம் என்றும் இதற்கு தேர்தல் ஆணையம் எப்படி அனுமதி அளித்தது என்றும் கிருஷ்ணசாமி கேள்வியுள்ளார்.