1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (18:48 IST)

அதிமுக அரசு கலைக்கப்பட வேண்டிய அரசு: விஜய்காந்த்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் போராட்டம் 100 வது நாளை எட்டியிருக்கிறது. இதனால், இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். 
 
இந்த சம்பவத்திற்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றபோது, ஆலைக்கு ஆதரவாகத் தமிழக அரசின் காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. 
 
அமைதியான போராட்டம் கலவரமாக மாறியதுடன் இதனால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. பொதுமக்களுக்குப் பாதிப்பு என்று தெரிந்தும் அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 
 
மக்களின் உயிரும் உடைமைகளும்தான் முக்கியமே தவிர, மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டமும் வெற்றிபெற்றதாக இல்லை. எனவே மக்கள் விரும்பாத அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக ஆளும் அதிமுக அரசும் மத்திய அரசும் தடைவிதித்து நிரந்தரமாக மூட வேண்டும். 
 
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதைத் தவிர்க்காமல் தமிழக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதும், காலம் தாழ்த்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அதிமுக அரசும் மத்திய அரசும் இதில் முழுக்கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய அ.தி.மு.க அரசு கலைக்கப்பட வேண்டிய அரசு என்று தெரிவித்துள்ளார்.