1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (17:34 IST)

திமுக என்றாலே தில்லுமுல்லு... டிடிவி தினகரன் டிவிட்!

பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என டிடிவி கோரிக்கை. 

 
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, 5 சவரனுக்குள் வாங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதும் அதனை அடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கான நடைமுறைகள் ஆரம்பம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைகடன் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்ய கோரி விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48.84 லட்சம் பேர் என்றும் அதில் 35.37 லட்சம் பேர் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி இல்லாதவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 75% பேர் அதற்கு தகுதி இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாவது, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் திமுக அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது. எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி தெளித்து அதிகாரத்திற்கு வந்துவிட்டு, இப்போது அதிலிருந்து தப்பிக்க காரணங்களைத் தேடுவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். 
 
எனவே, பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், திமுக என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள்.