1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (12:09 IST)

நெல்லையில் பூலித்தேவர் ஜெயந்தி – 15 நாட்களுக்கு முன்பே 144 தடை உத்தரவு

திருநெல்வேலியில் ஒண்டிவீரன் நினைவுநாள் மற்றும் பூலித்தேவர் ஜெயந்தி ஆகிய விழாக்கள் நடக்க இருப்பதால் 15 நாட்களுக்கு 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் சிவகிரி தாலுகாவுக்கு உட்பட்ட நெற்கட்டும் சேவலில் வருகிற ஆகஸ்டு 20ம் தேதி ஒண்டிவீரன் நினைவுநாள் நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் முதல் தேதியன்று பூலித்தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கிறது.

கடந்த வருடங்களில் இந்த இரு நிகழ்வுகளின் போதும் வெவ்வேறு இனக்குழுக்கள் இடையே கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால் இந்த முறை எந்த கலவரமும் நடைபெறாமல் இருக்க நாளை மறுநாள் 20ம் தேதி காலை 6 மணியிலிருந்து செப்டம்பர் மாதம் 2ம் தேதி காலை 6 மணி வரை 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த 15 நாட்களுக்கு திருநெல்வேலி பகுதியில் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக சுற்றக் கூடாது.

வாள், கத்தி, அரிவாள், வெடி பொருட்கள் ஆகியவற்றை கையில் எடுத்து செல்லவோ அல்லது மறைமுகமாக எடுத்து செல்லவோ கூடாது.

மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குதல், பால்குடம், காவடி எடுத்தல் போன்ற விஷயங்களை செய்யக் கூடாது.

திருவிழா நடக்கும் ஊர்களில் வாடிக்கையாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், அந்த பகுதியை சேர்ந்தவர்களின் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம்.

ஒண்டி  வீரன் நினைவு தினம் மற்றும் பூலித்தேவர் ஜெயந்திக்கு வருபவர்கள் உரிய முறையில் சோதனை செய்யப்பட்டு காவல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.