வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (06:43 IST)

ஏப்ரல் 17, 18 தேதிகளில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடக்குமா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் சூழலில் திட்டமிட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடக்குமா? என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
ஏப்ரல் 17 மற்றும் 18 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற உள்ளன. உதவி வேளாண்மை அலுவலர். உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பணிகளுக்காக நடத்த திட்டமிட்டு இருக்கும் இந்த தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் திட்டமிட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தபடி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவி களுக்கு, திட்டமிட்ட படி எழுத்துத் தேர்வு நடக்கும். வரும், 17 மற்றும், 18ம் தேதி, காலை மற்றும் மதியம்; 19ம் தேதி காலை மட்டும், ஏழு மாவட்டங்களில், தேர்வு நடக்க உள்ளது.
 
விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவுச்சீட்டை, www.tnpsc.gov.in; www.tnpscexams.in ஆகியவற்றில், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நடக்கும் இடத்தை அறிந்து கொள்ள, தேர்வு நுழைவு சீட்டில், 'கியூஆர் கோடு' அச்சிடப்பட்டுள்ளது. அதை, 'ஸ்கேன்' செய்து, 'கூகுள் மேப்' வழியே, தேர்வுக்கூடம் செல்லலாம். தேர்வு அறைக்குள், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.