1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (12:15 IST)

தலைவர் பதவிக்கு பதிலாக துணைத் தலைவர் பதவி..! – ஓகே சொன்ன திருமா!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் தலைவர் பதவி வழங்கிய இடத்தில் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட நிலையில் நகராட்சி, பேரூராட்சி பதவிகள் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கி இருந்தது. ஆனால் அந்த பகுதிகளில் தலைமை அனுமதி இல்லாமல் சில திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இதை கண்டித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிய இடத்தில் போட்டியிட்ட திமுகவினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஆனாலும் பலர் ராஜினாமா செய்யாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவர் பதவியை திமுகவை சேர்ந்த ஜெயபிரபா ராஜினாமா செய்துள்ளார். நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக தலைமையால் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பதவிக்கு திமுகவை சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கையை தொடர்ந்து திருமாவளவனை நேரில் சந்தித்து பேசிய ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் திமுகவினர், தலைவர் பதவிக்கு பதிலாக துணைத் தலைவர் பதவியை அளிப்பதாக சமரசம் பேசியுள்ளனர். அதற்கு திருமாவளவன் ஒத்துக் கொண்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி துணைத்தலைவர் பதவியில் விசிகவை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.