1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (14:51 IST)

பாதாள சாக்கடையில் விழுந்த பெண்.! ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிப்பு.!!

Women
கோவையில் பாதாள சாக்கடையில் மூடப்படாமல் இருந்த குழியில் பெண் விழுந்து காயமடைந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
 
கோவை காந்திபுரம் 100 அடி சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்தசூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டு, ஆங்காங்கே பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே கிடந்துள்ளன.
 
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை இவ்வழியாக வந்த இளம்பெண் ஒருவர் பாதாள சாக்கடை மூடிகள் திறந்திருப்பதை கவனிக்காமல் திடீரென குழிக்குள் தவறி விழுந்தார்.
 
காலில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக பாதாள சாக்கடை குழிகளை மூடினர்.

 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். காந்திபுரம் உதவி செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.