வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (14:54 IST)

அரசியல்வாதிகளின் சுயநலத்தால் என்ன விளைகிறது..? பேனர்களின் மோகம் இனி தீருமா ...?

சென்னை, பள்ளிக்கரணையில், சாலை ஓரத்தில், அதிமுக கட்சி பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்தது.  அதனால், வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது பெண், நிலைதடுமாறி விழுந்தபோது, அவர் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து, லாரி ஓட்டுநர் மனோஜ் என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 
 
நேற்று நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது வழக்காக பதியப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த பெண்ணின் மரணம் குறித்த வழக்கைக் கையில் எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தது. 
அத்துடன், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கட்சி கொடிகளை உடனே அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களும், நிர்வாகிகளும் பேனர்களை வைக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இது மக்களால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள், மக்களிடம் தங்களின் முகத்தையும், தங்களின் விளம்பரத்தை வெளிப்படுத்தவும் ஆடம்பரமாக இந்த பிளக்ஸ்,பேனர்களை தெருவெங்கிலும் வைத்து கட்சித் தலைமையை சந்தோசப்படுத்திவரும் வேலைகளைத் தங்கள் கைக்காசு போட்டு செலவு செய்து வந்தனர் அக்கட்சித் தொண்டர்கள்.

 
சாலையில் வைத்திருந்த  ஒரு பேனர் நேற்று சரிந்து விழுந்ததால், இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் பலியானார். மக்களிடம், சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம் ! என்று அரைகூவல் விடும்போது, மக்களின் இடைஞ்சல்களை சரிசெய்து தரவேண்டும், அதைவிடுத்து அவர்களே மக்களுக்கு ஒரு இடைஞ்சலாக மாறக் கூடாது.

 
காமராஜர் ஆட்சியில் முதல்வராக இருந்தபொழுது, அவரது கட்சியினர், நம் ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் கூற, விளம்பரங்கள் செய்யலாம் என அணுகினர். அவரோ, அப்படி செய்யும் விளம்பர பணத்துக்கு பள்ளிக் கூடங்களைத் தொடங்கிவிடுவேன் என அறிவுரை வழங்கி அதுபோலவே வாழ்ந்து காட்டினார். ஆனால் அவர் சொந்த ஊரிலேயே அவர் தோற்கடிக்கப்பட்டது வேறுவிஷயம்.
இந்த நிலையில், ஒரு உயிர் பலியான பிறகுதான், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட, இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இனிமேல் கட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் பேனர் வைத்தால் அதில் கலந்து கொள்ள மாட்டேன் என, கூறியுள்ளது நல்ல செய்தி. ஆனால், இதற்கு முன்னரே அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் கூட அவரது கட்சியினர் பேனர்கள் வைப்பதை அவரால் தடுக்க முடியவில்லை என்பதாலும்கூட அரசியல் விமர்சகர்கள் அவர்மீதும், திமுகவினர் மீதும் குற்றம் சாட்டலாம்...!

 
ஆனால், பெண்ணை இழந்து, இன்று  துக்கத்தில் வாடி நிற்கும் குடும்பத்தினர் இன்றைய ஆளும் கட்சியினர் சார்பில் முதல்வர் மற்றும் துணைமுதல்வர்கள் இணைந்து இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என அறிக்கை வெளியிட்டுள்ளதை ஏற்பார்களா..? அப்படி., ஏற்றுக்கொண்டாலும் மகளின் இழப்பு இழப்புதானே ! அந்த இழப்பை எதைக்கொண்டு அவர்களால் ஈடுகட்ட முடியும் ?

 
எத்தனை முறை நீதிமன்றங்கள், மக்களின் நன்மைக்காக அரசியல்வாதிகளுக்கு பேனர் வைக்கக்கூடாது என கட்டுப்பாடுகள், தடைகள் விதித்தாலும் அதையும் மீறி, சில நாட்கள் கழித்து, இந்தக் பேனர் கலாச்சாரத்தை கையில் எடுத்து அடுத்த பதவி சுகத்திற்காக, தலைமையைக் காக்கா பிடிக்க வேண்டி... இதை திரும்பவும் செய்து மக்களை இம்சிக்கிறார்கள்.
இதைக் தட்டிக் கேட்க இந்தியன் தாத்தா போன்று டிராபிக் ராமசாமி என்ற சமூக அக்கறை கொண்ட  ஒருவர் அரசியல்வாதிகளின் அட்டூழியத்தைத் தனிமனிதனாக தட்டிக் கேட்டால் ஆளும் - எதிர்க் கட்சித்தரப்பிலிருந்து அவருக்குப் பலத்த எதிர்ப்புகள் வருகிறது !!
இப்போது, சுபஸ்ரீ மரணத்திலிருந்து விழித்தெழுந்த அரசியல்வாதிகள் மீண்டும், அந்த பேனர் வியாதிகளை ஊருக்குள், சாலைகளில் வைக்காமல் இருக்க... இன்று வெகுண்டெழுந்த மக்கள் ஒவ்வொரு நாளும் இதே விழிப்புணர்வுடன் இருந்தால்தான் ,அரசியல்வாதிகளுக்கும், அதேபோன்று,  சினிமா நாயகர்களின் துதிபாடும்  ரசிகர்களுக்கும் மக்களுக்கு இடைஞ்சல் எனும் பேனர் வைக்கக்கூடாது என்ற ஒருபயம் வரும்! உயிர்களின் மதிப்பும் புரியும்.