1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (09:37 IST)

சசிகலாவை சந்திக்கப் போகிறேனா ? – தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் !

அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன் சிறைக்கு சென்று சசிகலவை சந்திக்கப் போகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக தங்க தமிழ்ச்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கு இடையில் தொடங்கிய பனிப்போர் இப்போது ஆடியோ மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் தங்க தமிழ்ச்செல்வனிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டதாக அமமுக தலைமை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட இந்த விஷயத்தில் தங்க தமிழ்ச்செல்வனின் அடுத்த மூவ் என்ன என்பதுதான் இப்போதை மில்லியன் டாலர் கேள்வி.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளும் அவருக்காக வலைவீசுவதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களிடம் பேசிய அவர் ‘தலைமையிடம் உள்ள குறைகளை நான் வெளிப்படையாக சுட்டிக்காட்டினேன். அதற்காக என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். ஆனால் வாட்ஸ் ஆப் குழுக்களில் என் மீது அவதூறை பரப்புகின்றனர். இது நல்ல தலைமைக்கு அழகல்ல.இந்த நடவடிக்கைகள் எல்லாம் சசிகலா ஒப்புதலோடுதான் எடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையா எனத் தெரியவில்லை. இந்த ஒன்றரை வருடத்தில் அவரை ஒரே ஒருமுறைதான் சந்தித்துள்ளேன். தற்போது வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். இந்தக் கட்சியை தொடங்கியதிலேயே சசிகலாவுக்கு உடன்பாடு இருக்கிறதா எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.