வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (12:56 IST)

தமிழகத்தில் பயிற்சி பெறும் பயங்கரவாதிகள்: ஓர் அதிர்ச்சி செய்தி

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பர்தான் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டும், பீகாரில் புத்தகயாவிலும் கடந்த 2018 ஆம் ஆண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் வங்காள நாட்டை சேர்ந்த தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாதுல் முஜாஹிதின் என்ற அமைப்பு ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு பிரிவினருக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவரான கவுசா, கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். கவுசாவிடம் தேசிய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதாவது, தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணதேவராயர் என்கிற சையத் பாஷா மலையில் பயங்கரவாதி கவுசா பதுங்கியிருந்த போது, அபாயகரமான வெடிகுண்டுகளை தயாரித்ததும், வெடிகுண்டு பரிசோதனை செய்ததும் தெரியவந்துள்ளது.

உடனடியாக தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் சி.வி.சுப்பாரெட்டி தலைமையிலான குழு, கவுசாவை கிரிஷ்ணகிரிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கவுசா மட்டுமல்லாது மேலும் சில பயங்கரவாதிகள் கிருஷ்ணகிரி மலையில் 10 நாட்களாக தங்கி இருந்து பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது.

தற்போது மலையில் இருந்த வெடிபொருட்களை கைப்பற்றிய அதிகாரிகள், இந்த பொருட்களை சப்ளை செய்த நபரை தேடி வருகின்றனர். சமீபகாலமாக தமிழகத்தில் பயங்கரவாதிகள் பிடிப்பட்டு வருவது அதிர்ச்சியை தந்துவரும் நிலையில், தற்போது கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றுவருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.