வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (15:14 IST)

நேர்மையான சப்-இன்ஸ்பெக்டரை பந்தாடிய அதிகாரிகள்.. இளநீர் கடையில் வேலை கேட்ட அவல நிலை!!

நேர்மையான அதிகாரியாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை பலரும் பந்தாடிய நிலையில், இளநீர் கடையில் வேலை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகா மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். கடந்த 2006 ஆம் ஆண்டு சிறைத்துறை காவலராக பணியில் சேர்ந்த இவர், சிறைச்சாலைக்குள் நடக்கும் தவறுகளுக்கு துணை போகாமல் நேர்மையாக நடந்துக்கொண்டுள்ளார். விளைவு, இவரால் அந்த பணியில் நீடிக்க முடியவில்லை.

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்ச்சி பெற்ற இவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். அங்கே சோதனைச் சாவடிகள் வழியாக கேரளாவில் இருந்து இறைச்சிக் கழிவுகள், மருந்தக கழிவுகள் ஆகியவை தமிழ்நாட்டின் எல்லைக்குள் கொட்டப்படும் லாரிகளை மடக்கி பிடித்தார். பிடிப்பட்ட லாரிகளை விடுவிக்க அரசியல் புள்ளிகளிடமிருந்து நெருக்கடி வந்தது. ஆனாலும் அவர் தனது நேர்மையில் விடாபிடியாக இருந்ததால் வேறு இடத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்.

பின்பு அவரை சென்னையில் அமைந்தகரை, அம்பத்தூர், அண்ணா நகர், அடையாறு உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு மாற்றினார்கள். ஆனாலும் அவர் நேர்மையாக இருந்ததால் அவரின் இன்க்ரீமண்ட் இழுத்தடிக்கப்பட்டது. கடந்த வருடம் ஆயுதப்படைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட அவர், தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். அங்கேயும் நேர்மையாக செயல்பட்டதால், சம்பளத்தைக் கூட அவரால் உரிய நேரத்தில் வாங்க முடியவில்லை.

இவ்வாறு தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட ராஜ்குமார், கடந்த 15 ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ "தலையிலும் முகத்திலும் இருக்கும் முடியைக்கூட நம் இஷ்டப்படி வைத்துக்கொள்ள முடியாத பணி; சொந்த பந்தங்களின் வீட்டு நல்லது கெட்டதில் கலந்துகொள்ள இயலாத பணி; பண்டிகைகளையோ நம் குடும்ப விழாக்களையோ தம் மனைவி மக்களோடு அனுபவிக்க முடியாத பணி; காலவரையற்ற பணி, வாராந்தர ஓய்வில்லா பணி, அரசு விடுமுறைகள் எதையும் அனுபவிக்க முடியாத பணி. இம்மாதம் யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது என உயர் அதிகாரிகளால் மாதம்தோறும் அறிக்கை அனுப்பப்படும் ஒரே பணி; அனுமதிக்கப்பட்ட 12 நாள் விடுமுறையைக்கூட நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி. அமைச்சுப் பணியாளர்களின் வேலையையும் நம்மீது சுமத்தி நாம் செய்ய தவறினாலோ மறுத்தாலோ நமக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளை வழங்கும் பணி.

மொத்தத்தில் இவற்றையெல்லாம் வெளியே சொல்லக்கூட முடியாதபடி கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரே பணி. இத்தனைக்கும் முன்வைக்கும் ஒரே சொல் 'கட்டுப்பாடான துறை'. ஏன் உயர் அதிகாரிகளுக்கு அந்தக் கட்டுப்பாடு பொருந்தாதா?” இதுவரை ஆதரவு வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி. அதிகாரம் செலுத்த நினைத்தவர்களுக்கு வாழ்த்துகள்"  என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ராஜ்குமாருக்கு மீண்டும் பதவி வழங்க, அவரது சொந்த ஊரை சேர்ந்தவர்களூம், அவர் கடைசியாக பணியில் இருந்த தருவைக்குளம் மக்களும் உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனாலும் அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் அவருக்கு சம்பளமும் வரவில்லை. மூன்று குழந்தைகளின் தந்தையாகிய அவர் இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டதால், சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்த அவர் ஒரு இளநீர் கடையில் கூலி வேலைக்காக கேட்டிருக்கிறார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் என்பதால் அவருக்கு அந்த வேலையும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தூத்துக்குடிக்கு மீன் பிடிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். அங்கேயும் சேர்த்துக்கொள்ளவில்லை. அதனால் சொந்தமாக பெட்டிக்கடை வைக்க திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள், “ராஜ்குமார் மாற்றலாகி வந்த பிறகு அவருடைய சர்வீஸ் புத்தகம் உடனடியாக வந்து சேரவில்லை. அதன் காரணமாகவே அவருக்கு ஜனவரி மாதத்திற்கான சம்பளப் பட்டியல் தயார் செய்வதற்கு தாமதம் ஏற்பட்டுவிட்டது. மேலும் அவர் கடந்த 20 நாட்களாக வேலைக்கு வரவில்லை” எனவும் கூறுகின்றனர்.