வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (07:31 IST)

பேருந்தில் ரெளடித்தனம் செய்த மாணவர்கள் கைகள் உடைப்பு! யார் காரணம்?

சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்கள் நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளை பயமுறுத்தியதும் அதன் பின்னர் ஒரு மாணவரை குறிவைத்து விரட்டி விரட்டி தாக்கியதுமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த இரண்டு மாணவர்களையும் கைது செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அந்த இரண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்
 
இந்த நிலையில் இந்த இரண்டு மாணவர்களின் புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் 2 மாணவர்களின் கைகள் உடைக்கப்பட்டு கட்டுப்போட்டிருப்பது போல் உள்ளது. இதனை அடுத்து காவல்துறையை சட்டத்தை தன் கையில் எடுத்து அந்த மாணவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளதாக ஒரு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: நேற்றைய அரிவாள் வெட்டு சம்பவத்தில், ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் கைகள் இன்று முறிக்கப்பட்டுள்ளது, கீழே விழுந்து கையை உடைத்து கொண்டார்கள் என்கிறது தமிழக காவல் துறை. காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகளுக்கு என்ன நடந்தாலும் காவல்துறை தான் பொறுப்பு. அப்பட்டமான மனித உரிமை மீறல்! என்று கூறியுள்ளார்.
 
சரவணன் அண்ணாத்துரையின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களை வைத்து ரெளடித்தனம் செய்ததோடு, பயணம் செய்பவர்களை பயமுறுத்தியவர்கள், சக மாணவரை தாக்கியவர்கள் மாணவர்களே அல்ல என்றும் சமூக விரோதிகள் என்றும் சமூக விரோதிகளுக்கும் முட்டுக்கொடுப்பது தேவையில்லாத செயல் என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
 
அதற்கு பதிலளித்துள்ள சரவணன் அண்ணாத்துரை கூறியதாவது: போலீஸ் தண்டனை கொடுப்பதற்கு நீதிமன்றங்கள் தேவையில்லை, யாருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என நம் சட்டம் சொல்கிறது! எந்த சட்டம் குற்றவாளியின் கையை உடைக்க சொல்கிறது? நாளை மஞ்சள் கோட்டை தாண்டி நிறுத்தினால், போலீஸ் காலை உடைத்தால் சரிதானென்று சென்று விடலாமா? என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.