1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (07:23 IST)

கிராம சபை கூட்டம் திடீர் ரத்து: தமிழக அரசின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

கிராம சபை கூட்டம் திடீர் ரத்து:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் தேதி உள்பட ஒரு சில முக்கிய தினங்களில் மட்டும் கிராம சபை கூட்டம் தமிழகத்தில் நடப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. இந்த கிராம சபை கூட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஆர்வத்துடன் நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு கோவிட்- 19 காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று இரவு திடீரென அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
அரசியல் கட்சிகளின் செயற்குழு பொதுக்குழு கூட்டங்கள் உள்பட மற்ற அனைத்து கூட்டங்களும் நடக்கும் போது கிராம சபை கூட்டம் மட்டும் நடக்க தடை விதிப்பது ஏன் என அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் 
 
இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது: வேளாண் சட்டங்களை எதிர்த்து அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களே தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் என்ற அச்சத்தால் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன! திமுக திட்டமிட்டபடி செயலாற்றும்! ஊராட்சித் தலைவர்கள் மக்களைச் சந்தித்து அதிமுக-வின் வஞ்சகத்தை எடுத்துரைப்பார்கள்!
 
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது: கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற  நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை எமதே!