1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Special bus routes for Deepavali

தீபாவளி சிறப்பு பேருந்துகளின் வழிதடங்கள் என்ன?

சிறப்பு பேருந்து வழிதடங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலரும் தங்கள் சொத்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் அந்த சமயம் சிறப்பு பேருந்துகள் பல இயக்கப்படுவது வழக்கம். 
 
அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் செயல்படும். பின்னர் தீபாவளி முடிந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு திரும்புவதற்காக 17,719 சிறப்பு பேருந்துகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
 
சிறப்பு பேருந்து வழிதடங்கள்: 
 
1. மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 
 
2. கே.கே.நகர் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
 
3. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
 
4. தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
 
5. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி  மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 
 
6. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்  (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,  தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம்,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை,  அரியலூர், திண்டுக்கல், விருதுநகர்,  திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு) இயக்கப்படும்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஃப்ரீயா தடுப்பூசி போடுறீங்களே.. அதுக்கு நிதி எப்படி வருது? - மத்திய அமைச்சரின் பதில்!