1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Speaker says we will take action on 11 MLA

11 எம்.எல்.ஏ.க்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்; சபாநாயகர்

தமிழகம்
11 எம்.எல்.ஏ.க்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் சபாநாயகர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 2017ல் நடைபெற்றபோது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி மற்றும் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் 11 உறுப்பினர்கள் மீது சட்டப்பேரவை தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை அதனால் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை என்று கூறி தகுதி நீக்க வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது. மேலும் சபா நாயகர் உரிய முடிவை எடுப்பார் என்றும்,  நடவடிக்கை எடுக்க சபா நாயகருக்கு காலக்கெடு எதுவும்  விதிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின், 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர், “தமது பரிசீலனையில் உள்ள விஷயத்தை சட்டப்பேரவையில் பேச முடியாது, 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் என்னுடைய ஆய்வில் உள்ளது. என்னை யாரும் வற்புறுத்த முடியாது. ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலப்படமா? பரவி வரும் வதந்தியால் பரபரப்பு