போயஸ் கார்டனில் ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை!.. தனிக்கட்சி தொடங்குவாரா?...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவரின் நிழல் போல இருந்தவர் விகே சசிகலா. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இவர் பார்க்கப்பட்டார். போயஸ்காரனில் உள்ள வேதா இல்லத்திற்கு சென்றாலும், ஜெயலலிதாவை சந்திக்க ஆசைப்பட்டாலும் முதலில் சசிக்கலாவைத்தான் சந்திக்க வேண்டும். அதேபோல் கட்சி ரீதியாகவும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என யார் வந்தாலும் அவர்கள் சசிகலாவைதான் சந்திப்பார்கள்.
ஜெயலலிதாவின் குரலாகவே இருந்து வந்தார் சசிகலா. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சசிகலாவையே முதல்வராகவும், அதிமுக தலைமையாகவும் மாற்ற அதிமுகவினர் திட்டமிட்டனர். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்டதால் கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்து விட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. ஆனால் சசிகலா சிறையில் இருந்த நான்கு வருடங்களில் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி..
மேலும் டிடிவி தினகரன், சிறையிலிருந்து விடுதலையான சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவுக்குள் வராமல் பார்த்துக் கொண்டார். இது டிடிவி தினகரன், சசிகலா தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு பழனிச்சாமிக்கு இருந்தது. அதோடு, மத்தியில் ஆளும் பாஜக அரசு எடப்பாடி பழனிச்சாமிக்கு உறுதுணையாக இருந்தது. அதேநேரம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துவிட்டார். எனவே சசிகலா தனித்துவிடப்பட்டிருக்கிறார்..
இந்நிலையிதான், சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவங்களுடன் இன்று மாலை ஆலோசனை செய்தார்.வருகிற 24-ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருவதால் அன்று சசிகலா தனிக்கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..