1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (09:02 IST)

குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்! குடும்பமே தற்கொலை! – சேலத்தில் சோகம்!

சேலத்தில் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டதால் குழந்தைகளை கொன்று பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கு மான்விழி என்ற பெண்ணுடன் திருமணமாகி நேகா (7), அக்‌ஷரா (5) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் குழந்தையான நேகாவுக்கு சர்க்கரை நோய் உள்ள நிலையில் தினமும் அவருக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இரண்டாவது மகள் அக்‌ஷராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனையில் அக்‌ஷராவுக்கு சர்க்கரைநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. தனது இரண்டு குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் இருப்பது தம்பதியரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த தம்பதியினர் அருகே உள்ள காவிரி நீர்தேக்க பகுதிக்கு சென்று இரண்டு மகள்களையும் நீரில் வீசி கொன்றுள்ளனர். பின்னர் தாங்களும் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வீட்டை விட்டு புறப்படும் முன்னே தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K