1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (11:06 IST)

ஒமிக்ரான் எதிரொலி.. இன்று முதல் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்!

தமிழ்நாட்டு விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேசப் பயணிகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலேயே வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 1 ஆம் தேதி (இன்று) முதல் இது அமலுக்கு வந்துள்ளது. 
 
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பின்வருமாறு... 
1. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு. 
2. விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். 
3. விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் அறிகுறி கண்டறியப்படும் பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவர். 
4. பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியானாலும் 7 நாட்களுக்கு கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவர். 
5. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தங்களது விவரங்களை குறிப்பிட்டு 7 நாட்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர்.