செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2017 (09:55 IST)

அரசியலுக்கு வருவது பற்றி அப்புறம் சொல்றேன் - என்ன சொல்ல வருகிறார் ரஜினி?

தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31ம் தேதி அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


 
நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்த் முதல்கட்டமாக கடந்த மே மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் வரை தனது ரசிகர்களை  சந்தித்தார். மாவட்ட வாரியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரஜினிகாந்த் பேசியது மிகுந்த பரபரப்பையும் விவாதங்களையும் எழுப்பியது. இந்நிலையில் ரஜினிகாந்த் வரும் ஜனவரி 1ம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவரது அரசியல் ஆலோசகரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் கூறியிருந்தார்.
 
இதனையடுத்து இரண்டாவது கட்டமாக நடக்கவிருக்கும் இந்த சந்திப்பு இன்று (டிசம்பர் 26) முதல்  டிசம்பர் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 
 
இந்நிலையில், இன்று ரசிகர்களின் முன் உரையாற்றிய ரஜினி “ அரசியலுக்கு நான் புதியவன் அல்ல. அரசியலைப்பற்றி தெரிந்ததால்தான் நான் தயங்குகிறேன். அரசியலுக்கு வீரம் முக்கியமில்லை. விவேகம்தான் முக்கியம்...
 
வருகிற 31ம் தேதி என்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிப்பேன். சமூக வலைத்தளங்களில் வரும் எதிர்மறைக்கருத்துகளை ரசிகர்கள் பொருட்படுத்த வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.
 
தற்போதும் அவர் அரசியல் அறிவிப்பை வெளியிடுவதாக கூறவில்லை. தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதைத்தான் கூறவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.