1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (20:39 IST)

பொய்த் தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்!- அரசின் ஃபேக்ட் செக் குழு தகவல்

bus
தற்காலிக ஓட்டுனர்களால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயலும் இத்தகைய பொய்த் தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்! என்று அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின், பழைய ஓய்வூதிய திட்டம்,  15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக  சமீபத்தில் தமிழக அரசுடன்  நடைபெற்ற  முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே திட்டமிட்டபடி கடந்த  ஜனவரி 9 ஆம் தேதி முதல்  வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து, அதன்படி போராட்டம் தீவிரமடைந்த  நிலையில்,  நீதிமன்ற உத்தரவை அடுத்து, பொங்கல் பண்டிகையொட்டி இப்போராட்டத்தை வரும் ஜனவரி 19 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஊழியர்களின் போராட்டத்தால் கடந்த 9 ஆம் தேதி முதல் தற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால், தற்காலிக பேருந்து ஓட்டுனர்கள் ஓட்டிய பேருந்து விபத்தில் சிக்கியதாக ஊடகங்களில்  தகவல் வெளியாகின.

இதுகுறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள செய்தி  சரிபார்ப்பு குழு இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், தற்காலிக ஓட்டுநர்களால் விபத்து' என்று புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. சில இணையதளங்களிலும் இந்த செய்தி பரவி வருகிறது

1. முதல் படம்  08 ஜனவரி 2018 அன்று 'பேருந்தை வாய்க்காலில் இறக்கிய தற்காலிக ஓட்டுநர்' என்ற தலைப்பில் புதிய தலைமுறை செய்தி இணையதளத்தில் வெளிவந்துள்ளது

2 . இரண்டாவது புகைப்படம் 07 ஜனவரி 2018 அன்று முதுகுளத்தூர் அருகே தற்காலிக ஓட்டுநர் தேர்வுக்காக நடைபெற்ற சோதனை ஓட்டத்தின்போது நடந்த விபத்தாகும். இதுகுறித்த செய்தி 'இந்து தமிழ்' செய்தி இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

3. மூன்றாவது புகைப்படத்தில் இருக்கும் பேருந்தில் பிங்க் வண்ணம் இல்லை .  தமிழ்நாடு அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 7-5-2021 முதல் சாதாரண நகரப் பேருந்துகள் (Whiteboard Buses) அனைத்தும் மகளிர் இலவச பேருந்துகளாக மாற்றப்பட்டதால் அவற்றின் முகப்பில் பிங்க் நிறம் பூசப்பட்டிருக்கும்.

கோவை, திருப்பூர் வட்டத்தில் எங்கும் தற்காலிக ஓட்டுநர்களால் அண்மையில் எந்த விபத்தும் ஏற்படவில்லை  என போக்குவரத்துதுறையும் உறுதிசெய்துள்ளது . தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயலும் இத்தகைய பொய்த் தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்! என்று தெரிவித்துள்ளது.