1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (10:22 IST)

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,கோவை செல்வபுரம் மண்டல் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 
தமிழகத்தில், கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் , கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில், வரும் நாளை முதல், டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு,பா.ஜ.க.தலைவர் எல்.முருகன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக, தமிழகம் முழுவதும்  பா.ஜ.க., சார்பில் ஆரப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் தலைவர் எல். முருகன் அறிவித்தலின் படி,.கோவையில் செல்வபுரம் மண்டல் சார்பாக தெலுங்குபாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மண்டல் தலைவர் டி.வி.குமார் தலைமையில் நடைபெற்ற இதில் மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் மண்டல் துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சமூக விலகல் மற்றும் முக கவசங்கள் அணிந்தபடி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. மேலும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பபட்டது.இதில் மண்டல் நிர்வாகிகள், வினோத், கோபால், முனீஸ்வரன், சுரேஷ், ராமசாமி, நாகராஜ், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.