1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 25 மார்ச் 2023 (15:37 IST)

திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் - வலுத்த போராட்டம்!

கோவையில் போலீசார் திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்துவதோடு பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்வதாக  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த திருநங்கைகள் கைகளைத் தட்டியும் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
கோவை டாடாபாத் பகுதியில்  கடந்த 22 ஆம் தேதி அதிகாலை நான்கு மணி அளவில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வசூல் செய்து கொண்டிருந்த திருநங்கைகளை போலீசார் விரட்டியபோது, போலீசார் திருநங்கைகளுடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டுளளனர். மேலும் திருநங்கைகள் போலீசார் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததோடு உதவிய ஆய்வாளரை தாக்கியதாக , உதவி ஆய்வாளர் காளீஸ்வரி என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
அதன் பேரில் 10 க்கும் மேற்பட்ட திருநங்கைகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதோடு இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள், டாடாபாத் பகுதியில் நடந்த சம்பவத்தில், காட்டூர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தங்களை தாக்கியதாகவும் மாறாக திருநங்கைகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகள் கைகளைத் தட்டியும் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இதுதொடர்பாக பேசிய திருநங்கை மும்தாஜ்,  போலீசாரை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்ததற்கான ஆதாரங்கள் எதுவும் போலீசாரிடம் இல்லை எனவும் தங்களை போலீசார் கடுமையாக தாக்கி துன்புறுத்திதோடு பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் , இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் திருநங்கைகள் தறரகொலை செய்து கொள்வோம் என தெரிவித்தார். 
 
மேலும் காவல் நிலையத்தில் இதுகுறித்து கேட்க சென்றபோது காவல் உதவி ஆய்வாளர் ஆடையை பிடித்து இழுத்தது துரத்தியதாகவும் புகார் கூறிய மும்தாஜ் தங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாத காரணத்தால் வசூல் செய்து வருவதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்..இதனைதொடர்ந்து திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.