வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (10:33 IST)

படகு கிடைக்கல.. தோணியில போகலாம்! – போட்டோஷூட் ஆர்வத்தால் நேர்ந்த சோகம்!

மைசூரில் திருமணத்திற்கு முன்பான போட்டோஷூட்டிற்காக சென்ற இளம் திருமண ஜோடிகள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு முன்பான Pre Wedding Photoshoot சமீப காலமாக ட்ரெண்டாகி வருகிறது. இவ்வாறான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருவதால் பல திருமண ஜோடிகள் திருமணத்திற்கு முன்பாக போட்டோஷூட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மைசூர் பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் சசிகலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 22ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக போட்டோஷூட் நடத்த விரும்பிய அவர்கள் முதுகுத்தூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு சென்றுள்ளனர். படகு கிடைக்காததால் தோணி ஒன்றில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் தோணியில் இருந்தபடியே அவர்கள் போட்டோஷூட்டிற்காக போஸ் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தோணி கவிழ்ந்துள்ளது. தோணியை ஓட்டி சென்ற நபர் நீச்சல் தெரிந்ததால் நீந்தி கரையை வந்தடைந்துள்ளார். ஆனால் திருமண ஜோடி இருவருக்குமே நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் திருமண ஜோடியின் சடலத்தை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.