செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (11:09 IST)

பெரியார் சிலையை உடைத்த மர்ம நபர்கள்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

சமீப காலமாக பெரியார் குறித்து விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. ரஜினிகாந்தை மன்னிப்பு கேட்க சொல்லி பெரியாரிய ஆதரவு இயக்கங்கள் போராட்டம் நடத்தின. ஆனால் ரஜினிகாந்த் ஆதாரங்களோடு பேசியிருப்பதாக மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

ஒருபக்கம் பாஜகவினர் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தாலும், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக அமைச்சர்களோ பெரியாருக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர். இதனால் கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் சாலைவாக்கம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.