1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (12:55 IST)

விமான நிலையத்தில் சோதனையே நடக்கவில்லை! – அலட்சியம் காட்டுகிறதா அரசு?

சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை சரியாக நடைபெறுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து தனிமைப்படுத்தப்படும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

ஓமனிலிருந்து காஞ்சிபுரம் வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை சரிவர செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

விமான நிலையத்தில் சரியான பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் கொரோனா பாதித்த அந்த பயணி எப்படி வெளியேறி சென்றிருக்க முடியும் என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்களில் வருபவர்களை மட்டுமே சோதிப்பதாகவும், உள்நாட்டு விமானங்களில் வருபவர்களை சோதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பயணி ஒருவர் ”சென்னை விமான நிலையத்தில் முறையான கொரோனா பரிசோதனைகள் நடைபெறவில்லை. வரும் பயணிகளை கூட்டமாக ஒரு இடத்தில் கூட செய்து, சில விண்ணப்பங்களை மட்டும் பூர்த்தி செய்து வாங்கி கொண்டு அனுப்பி விடுகிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனாலும் இந்த பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனவா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.