1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 மார்ச் 2025 (08:49 IST)

பாம்பன் புதிய ரயில் பாலம்: திறந்து வைக்க வருகிறார் பிரதமர் மோடி! ஏற்பாடுகள் தீவிரம்!

ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் பாம்பன் பாலம் பழுதடைந்த நிலையில் அதன் அருகிலேயே புதிய பாம்பன் கட்டப்பட்டுள்ளது. ரூ.545 கோடியில் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய அமைப்புடன், பழைய பாம்பன் பாலத்தின் சிறப்புகளோடே புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.

 

ரயில் சோதனை முயற்சிகளும் நல்லபடியாக நடந்து முடிந்து விட்ட நிலையில் 3 மாதங்களாகியும் பாம்பன் பாலம் திறக்கப்படாமல் உள்ளது. பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதால் அவர் வந்து திறந்து வைப்பதற்காக காத்திருக்கின்றனர்.

 

இந்நிலையில் ஏப்ரல் 5ம் தேதி அரசு முறை பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஏப்ரல் 6ம் தேதி பாம்பன் வந்து பாலத்தை திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர், முதல்வர், ஆளுநர் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

 

அதன்பின்னர் ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்யும் பிரதமர் மோடி மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். முன்னதாக பாஜக பொதுக்கூட்டம் ஒன்று  நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K